top of page

புதிய பறவைகளை பார்ப்பதென்பதும், அவற்றைப் பற்றி அறிவதென்பதும் பெரும் இரகசியத்தை அவிழ்ப்பது போன்றது. குழந்தைகளிடத்தில் பறவைகள் மீதான ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும் என்று  சொல்லும் மனநல மருத்துவரும் பறவையியல் ஆர்வலருமான ராமானுஜம் அவர்களின் முகத்தில் பறவைகள் என்று சொன்ன கணமே புன்னகை அரும்புகிறது. பல்வேறு பகுதிகளிலுள்ள பறவைகளைத் தேடிப்போய் கவனிப்பதில் தாழாத ஆர்வமுடைய அவரிடம் மனதுக்குள் பறவைகள் சிலம்ப சற்று நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.

 

1) அடிப்படையில் மனநல மருத்துவரான உங்களுக்கு பறவைகள் மீதான ஆர்வம் வந்தது எவ்வாறு?

 

பறவை என்றதுமே இயற்கையாக ஏற்படும் ஆர்வம், ஆனந்தம் என்னிடமும் உண்டு. இலக்கியங்கள் அதிகம் வாசிப்பதுண்டு. இலக்கிய ரீதியாக இது எனக்குள் வந்தது என்று கூட சொல்லலாம். நம் சங்க இலக்கியங்கள் தொட்டு சமீப இலக்கியங்கள் வரை மரத்தையும், பறவைகளையும், இயற்கையையும் எழுதித் தீர்த்த, வாசித்துத் தீராத சமூகம் நம் சமூகம். க்ரியா பதிப்பகத்தின் "பறவைகள் அறிமுகக் கையேடு" என்ற நூலை நண்பர் அறிமுகப்படுத்தினார். அந்த வாசிப்பின் தாக்கமும் இதற்கு காரணம். புதிய பறவைகளை பார்ப்பதென்பதும், அவற்றைப் பற்றி அறிவதென்பதும் பெரும் இரகசியத்தை அவிழ்ப்பது போன்றது. மகிழ்ச்சியும், பொழுதுபோக்குத் தன்மையும் கூடவே கூடியது.

2) பொதுவாக பறவைகளைப் பார்க்க எங்கெல்லாம் செல்வீர்கள்?

 

நெல்லையைப் பொறுத்தவரை கூந்தன் குளத்தில் அதிக எண்ணிக்கையிலான பறவைகளைக் காணலாம். ஆனால் அதற்காகவே மெனக்கெட்டு அங்கு போய் பார்க்க வேண்டும் என்றில்லை. நம் இல்லங்களுக்கு மிக அருகாமையிலேயே நாம் தினசரி பார்க்காமல் கடந்து செல்லும் பறவைகள் எத்தனை எத்தனையோ வாழ்ந்துகொண்டிருக்கின்றன. அவற்றை ஒரு நிமிடம் நின்று நோக்கினோமேயானால் பல புதிய இனங்கள் நமக்கு அறிமுகமாகும். நயினார்குளம் அருகே சும்மா நடந்து பார்த்தால் நிறைய பறவைகள் தென்படும். நீர்நிலை, மரம், தரை இப்படி நிறைய இடங்களில் பறவைகளைப் பார்க்கலாம். ராமையன்பட்டி செல்லும் பாதையில், வண்ணாரப்பேட்டை அரவன்குளம் அருகில் நிறைய பறவைகள் தென்படும். திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மைதானத்தில் அதிக பறவையினங்களை பார்க்கலாம். இவ்வளவு எதற்கு நம் வீட்டு மொட்டை மாடியில் பார்க்க முடியாத பறவைகளா என்ன?

 

3) வலசை பறவைகள் என்று எவற்றைக் குறிப்பிடுகிறோம்?

 

பொதுவாகவே பறவைகள் ஒவ்வொரு ஆண்டும் இனப்பெருக்கம், இரைதேடுதல், பருவநிலை மாறுபாடு ஆகிய காரணங்களால் இடம்பெயருதலுக்கு வலசை என்று பெயர். நூறு மீட்டர் தூரத்திலிருந்து லட்சக்கணக்கான கிலோமீட்டர் தூரம் வரை பறவைகள் இடம் பெயரும். நிலத்தைப் பற்றிய அறிவு பறவைகளுக்கு எப்போதுமே உண்டு. இதை ஆங்கிலத்தில் Topography என்று கூறுவர். உதாரணமாக சைபீரியா போன்ற நாடுகளில் குளிர்காலத்தில் நிலவும் அதிகமான பனிப்பொழிவு பறவைகள் வாழ்வதற்கு ஒவ்வாதது. ஆகையால் அவை இடம் மாற்றி இங்கே வருகின்றன.

4) பறவைகள் கூடுகட்டுவது பற்றி....

 

இன்ன இடத்தில் இன்ன மரத்தில் அதிலும் குறிப்பாக இன்ன கிளையில் தான் கூட்டை கட்டி முடிக்க வேண்டும் என்ற நினைவாற்றல் பறவைகளிடம் மிக அதிகமாகவே உண்டு. சிறிது இடத்தை மாற்றினாலும் அல்லது திசை திருப்பப்பட்டாலும் அது அதற்கு ஒவ்வாத ஒன்றாகிப் போகும். உதாரணமாக  மொட்டை மாடியில் ஒரு பறவையை ஒரு இடத்தில் நிற்பதைக் காண்கிறீர்கள். மறுநாளும் அந்தப் பறவை அதே இடத்தில் சரியாக வந்து நிற்கும். கூடு என்பதை பறவைகள் கட்ட அடிப்படை காரணம் இரண்டு். முட்டை கீழே விழாமல் இருக்க,குஞ்சுகளைப் பாதுகாக்க. ஒரு கிளை தாங்குமா தாங்காதா என்பதை பறவைகள் மிகச்சரியாக எடைபோட்டு விடும். எளிமையான கூடுகளை மட்டுமே கட்டும் நிறைய பறவைகள் உண்டு. ஆனால் தூக்கணாங்குருவி இதிலிருந்து மாறுபட்டது. திறமையை வெளிக்காட்டவே அவை கூடு கட்டும். அதுவும் ஆண் குருவிகளே கூடு கட்டும். கூடு கட்டிமுடித்த பிறகு பெண் குருவி வந்து நோட்டமிடும். எந்த ஆண் குருவியின் கூடு சிறப்பாகக் கட்டப்பட்டிருக்கிறதோ, எந்தக் கூடு தன்னைக் கவர்கிறதோ அந்தக் கூட்டிற்குரிய ஆண்குருவியோடு ஜோடி சேர்ந்து  இனப்பெருக்கம் செய்யும்.

 

5) வலசைப் பறவைகளுக்குள் ஏதாவது தகவல் பரிமாற்றம் நிகழுமா?

 

நிச்சயமாக. கூட்டமாகப் பறக்கும்பொழுது அவை தங்களுக்குள் செய்திப் பரிமாற்றம் செய்துகொள்கின்றன. ஒலி வடிவில் இது நிகழும். மேலும் பறத்தலிலேயே அவை சேர்ந்தாற்போல் கூட்டமாக V வடிவத்தில் பறக்கும். அவ்வாறு பறக்கக் காரணம் Air Dynamics என்ற விதிதான். அதாவது காற்றின் திசைவேகம் அறிந்து பறக்கும் யுக்தி இது.

 

6) பறவைகளிடம் உள்ள திறன்களில் மிகப்பிடித்த ஒன்று?

 

விலங்கினங்களுக்கு மோப்ப சக்தி அதிகம். பறவைகள் கிட்டத்தட்ட மோப்ப சக்தி அற்றவை. அறவே இல்லை என்று சொல்லுமளவு அவற்றின் மோப்பத்திறன் குறைவானது. ஆனால், பறவைகள் அதிர்வுகளை நன்குணரும். விலங்குகளால் அது முடியாது. சின்னச் சின்ன அதிர்வுகளையும் முன்கூட்டியே கணிக்கும் திறன் பறவைகளுக்கு மட்டுந்தான் உண்டு. உதாரணமாக பூகம்ப நேரங்களில் அவை முன்கூட்டியே தப்பிப்பதை கூறலாம். அழிந்த டைனோசர் இனத்திலிருந்தே பறவைகள் வந்ததாக அறிவியல் பூர்வமான ஒரு ஆச்சரியத் தகவலும் உண்டு..

 

7) எங்கிருந்தோ வரும் வலசை பறவைகளால் இங்கிருக்கும் பறவைகளுக்கு பாதிப்புகள் ஏற்படாதா?

தகுந்த இடங்களை தேர்வு செய்தே அவை வரும். இருப்பினும் இடத்திற்காக அவைகளுக்குள் போட்டி, சண்டையெல்லாம் ஏற்படும். வேறு வேறு இனப்பறவைகள் என்றால் சண்டை கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும்.. உதாரணமாக கரிச்சான்குருவி அதிகம் வம்பு வளர்க்கும். சில சமயங்களில் கழுகையும் கூட அது விரட்டும்.

 

8) பறவைகள் பற்றி அறிந்து கொள்ள விளைபவர்களுக்கு நீங்கள் கூறுவது?

 

எல்லாவற்றிற்கும் அடிப்படையே ஆர்வம் தான். முதலில் ஆர்வம் வேண்டும். புத்தகங்களில் அவற்றை வளர்த்துக்கொள்ளலாம். இது இன்ன பறவையினம் என கண்டுபிடிக்க அப்பறவையின் அளவும், நிறமும் உதவிகரமாக இருக்கும். அளவைப் பொறுத்தவரை சிறியது, மிகச்சிறியது, பெரியது, மிகப்பெரியது, மத்திய அளவானது என்று பல்வேறு விதமாக வகைப்படுத்தலாம். நிறத்தில் அதன் அலகு, புள்ளி ஆகியவைகளை கணக்கில் கொள்ளலாம். சிறகின் நிறமும் சில சமயம் கைகொடுக்கும். ஒரே இனத்தைச் சேர்ந்தாலும் ஆண் பறவைக்கும், பெண் பறவைக்கும் நிறம் வித்தியாசப்படும். இனப்பெருக்க காலத்திலும் அவற்றில் நிற மாறுதல் ஏற்படும்.  பறவைகளைப் பற்றிய விஷயங்கள் தெரிந்து கொள்ள தெரிந்து கொள்ள ஆர்வம் மேலிடும். முகநூலில் Indian Birds என்றொரு பக்கம் உண்டு. அதில் நாம் ஒரு பறவையை புகைப்படம் எடுத்துப் பகிர்ந்தால் இது இன்ன பறவையென கண்டறிந்து சொல்ல நிறைய பேர் உதவுகின்றனர்.

 

10) பறவைகள் ஒலி எழுப்புவது பற்றி?

 

ஒரே பறவையே சில நேரங்களில் வேறு வேறு விதமான ஒலி எழுப்புவதும் உண்டு. குயில் காலையில் ஒரு ரகத்தில் பாடினால் மாலையில் வேறொரு ரகத்தில் பாடும். கோடை காலங்களில் பாடவே பாடாது. மழை காலம் வந்தவுடன் கச்சேரி களைகட்டும். தமிழ் இலக்கியத்தில் ஏராளமான பறவைகளின் ஒலி பற்றிய குறிப்புகள் கூறப்பட்டிருக்கின்றன. பறவைகள் நிறைய இருந்தால் அந்த இடம் செழிப்பான இடமாகவே இருக்கும். அதைத்தானே தேடி அவையும் வருகின்றன.

 

11) பறவை பார்த்தலில் உங்கள் எதிர்பார்ப்பு?

 

"தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை" என்பது  பழமொழி. அதற்கேற்ப, குழந்தைகளிடத்தில் பறவைகள் மீதான ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும். விதவிதமான பறவைகளை அவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். வீட்டுக்கு அருகிலுள்ள பகுதிகளுக்கு அவர்களை அழைத்துச் சென்று பறவைகளை அடையாளம் காட்டிப் பழக்க வேண்டும். மற்றொரு சந்தர்ப்பத்தில் ஒரு பறவையைச் சுட்டிக்காட்டி அதனை அவர்களே இன்ன பறவையென கண்டுபிடிக்கச் சொல்ல வேண்டும். தொலைக்காட்சி, அலைப்பேசி இவற்றிலிருந்து குழந்தைகளை மீட்க சிறந்த ஒரு வழி இது. அது மட்டுமில்லாது இது அவர்களுக்கு ஒரு நல்ல விளையாட்டாகவும் இருக்கும். எப்போதுமே குழந்தைகள் பறவைகளோடு எளிதாகப் நெருக்கமாகிவிடுவார்கள்.

 

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் மனநல மருத்துவராகப் பணிபுரிபவர் ராமானுஜம். மருத்துவம் மட்டுமின்றி பல்வேறு துறைகளிலும் ஈடுபாடு மிக்கவர். இயற்கை உணவுப் பிரியர். பழந்தமிழ் இலக்கியத்திலும் சமகால இலக்கியத்திலும் திளைப்பவர். இசைக் கலைஞர். பாடகர். மன வெளிப் பயணம் என்கிற தன் வலைப்பூவில் தொடர்ந்து எழுதிவருகிறார். தவிர, புதிய ஆசிரியன், செம்மலர், Bank Worker's Unity, தி இந்து (தமிழ்) உள்ளிட்டவற்றில் எழுதியிருக்கிறார். சமீபத்தில் வெளியான இவரது 'நோயர் விருப்பம்' வாசக வெளியில் சக்கைபோடு போடுகிறது.

ராமானுஜம், பறவைகள் ஆர்வலர்

ramsych2@gmail.com

bottom of page